புயல் எச்சரிக்கை.! மொட்டை மாடிக்கு செல்ல கூடாது! திறந்த வெளியில் செல்பி எடுக்க கூடாது- தமிழக அரசு எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published Dec 9, 2022, 3:02 PM IST
Highlights

புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை  முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாண்டஸ் புயல்  மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்று ­ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கன, மிக கனமழை மற்றும் அதி கனமழைப் பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதன் படி 

மழை எச்சரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலி..! தூத்துக்குடியில் உள்வாங்கியது கடல்..! அதிர்ச்சியில் மீனவர்கள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  9-12-2022 காலை 6.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை கொளச்சல் முதல் கீழக்கரை வரை உள்ள கடலோர பகுதிகளில் 3.0 மீட்டர் முதல் 3.7 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்றும்,

9-12-2022 காலை 5.30 மணி முதல் 09-12-2022 இரவு 11.30 வரை வேதாரண்யம் முதல் பழவேர்காடு வரை உள்ள கடலோர பகுதிகளில் 3.5 மீட்டர் முதல் 5.2 மீட்டர் வரை கடல் அலைகளின் உயரம் இருக்கும் என்று இந்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அநாவசியமாக யாரும் வெளியே வராதீங்க.. பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்..!

 தரைக்காற்று குறித்த எச்சரிக்கை

09-12-2022 அன்று புயல் கரையைக் கடக்கும் போது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின் படி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 476 வீரர்கள் அடங்கிய 14 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் பாதிப்பிற்குள்ளாகும் என கருதப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் 169 நிவாரண மையங்களும், தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 882 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாண்டஸ் புயலால் கடல் சீற்றம்.. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்..!
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும். மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும். பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கான அறிவுரை

ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க மாவட்ட நிருவாக அறிவுறுத்தும் போது, அதனை ஏற்று புயலின் தாக்கம் வரும் வரை காத்திராமல் நிவாரண முகாம்களில் முன்கூட்டியே தங்க வேண்டும். கேஸ் கசிவு ஏற்படாதவாறு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் அணைத்து வைக்கவேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் போது ஜன்னல் மற்றும் வாசல் கதவுகள் சரியான முறையில் இருக  முடப்பட்டுள்ளனவா என்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டும். மெழுகுவர்த்தி, கைமின் விளக்கு (torch light), தீப்பெட்டி, மின்கலங்கள் (batteries), மருத்துவ கட்டு (band aid), உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுகோஸ் உள்ளிட்ட பொருட்கள்  அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.

புயல் நேரத்தில் செய்யக் கூடாதவை

 9-12-2022 இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், பொது மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.  நீர் நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும் போது திறந்த வெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புயல் மற்றும் கன மழை நேரங்களில் பழைய கட்டடங்கள் மற்றும் மரங்களின் கீழே நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புயல் கடக்கும் நேரத்தில் கட்டங்களின் மொட்டை மாடிகளில் நிற்பதை  முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! தூத்துக்குடியில் உள்வாங்கியது கடல்..! அதிர்ச்சியில் மீனவர்கள்
 

click me!