
முதியோர்களுக்கு தனி கொள்கை
முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன், முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர் என தெரிவித்தார்.
முறைகேட்டிற்கு ஆதாரம் இல்லை
18 வயதில் சிலர் காதல் திருமணம் செய்துகொள்வதும் குழந்தைத் திருமணம் என்றே கருதப்படுகிறது.குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் விரைவில் நிலைமை மாறும் என தெரிவித்தவர், குழந்தை திருமண எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்தார். 1 முதல் 5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது. விலைப்பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.