
குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள்
யானைகளின் வழிதடத்தை ஆக்கிரமித்து வீடுகள், ரிசார்டுகள் கட்டுவதன் மூலமாக வன விலங்குகளுக்கும் மக்களும் இடையே தொடர் மோதல் ஏற்பட்டு வருகிறது. தங்களது பாதைகளை கண்டறியமுடியாமல் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதே போன்ற நிகழ்வு
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாக குட்டிகள் உட்பட 6 யானைகள் கொண்ட ஒரு யானை கூட்டம் அந்த பகுதியில் சுற்றி வருகின்றன. யானைகள் பயிர்களை சேதம் செய்ததோடு, அந்த பகுதியில் உள்ள வீட்டு கதவுளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அங்கிருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்ட யானைகள், பாத்திரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வழி தவறிய காட்டுயானையால் அச்சம்
இதனிடையே யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு யானை மட்டும் வழி தவறி வீடுகள் உள்ள பகுதிக்குள் புகுந்தது. கூட்டத்தில் இருந்து பிரிந்து வழிதவறிய யானை ஆக்ரோசமாக அந்த பகுதியில் சுற்றி வருகிறது.இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர் அப்போது காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த நாகராஜ் என்ற வேட்டை தடுப்பு காவலர், யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.இதையடுத்து நாகராஜை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வனக்காவலரை காட்டு யானை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.