திருநெல்வேலி
திருநெல்வேலியில் தெருவிளக்கை சரிசெய்வதாக கூறி மின்கம்பத்தில் ஏறிய கொத்தனார் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பனவடலிசத்திரம் அருகே உள்ள ஜமீன்இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (38). கொத்தனாராக வேலை பார்த்துவந்த இவரது வீடு ஊருக்கு வெளிப்புறமாக அமைந்துள்ளது.
இவரது வீட்டின் அருகே தெரு விளக்கு ஒன்று கடந்த சில நாட்களாக எரியவில்லையாம். நேற்று காலை அந்த மின்விளக்கை சரிசெய்வதாக கூறி நாகராஜன் மின்கம்பத்தில் ஏறியுள்ளார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மின்கம்பத்திலேயே தொங்கிய நிலையில் கிடந்துள்ளார் நாகராஜன். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மின்வாரியத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தினர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பனவடலிசத்திரம் காவலாளர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
நாகராஜனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகராஜனுக்கு வேலுத்தாய் என்ற மனைவியும், மதுமிதா, கலாராணி ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.
மூத்த மகள் மதுமிதா நாகர்கோவிலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியிலும், கலாராணி 11–ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.