தஞ்சாவூர்
தஞ்சாவூரில் ரூ.40 ஆயிரத்தை திருடிவிட்டு வீட்டுக்கு தீவைத்தவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், அகரமாங்குடி கிராமம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் டேனியல். இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவரது மனைவி எலிசபெத்ராணி (52).
சம்பவத்தன்று டேனியல் வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள மாதாகோவிலுக்குச் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்திருந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ஐயம்பேட்டை காவலாளர்கள் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், ஐயம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே காவலாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அகரமாங்குடி மாதாகோவில் தெருவை சேர்ந்த சின்னப்பர் (47) என்பதும், டேனியல் வீட்டினுள் நுழைந்து வீட்டிலிருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு, பிறகு வீட்டுக்கு தீவைத்துவிட்டு சென்றதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சின்னப்பரை கைது செய்த காவலாளர்கள் அவரிடமிருந்து ரூ. 40 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.