
சிவகங்கை
சிவகங்கைய்யில் உள்ள அரசு சாராயக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆட்சியர் க.லதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் க.லதா தலைமைத் தாங்கினார்.
அப்போது அங்கு வந்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, எஸ்.எம்.தெரு மக்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த மனுவில், "காரைக்குடி எஸ்.எம்.தெருவில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு சாராயக் கடை அமைக்கப்பட்டது.
இந்தக் கடையின் மூலம் அப்பகுதியில் வாழும் மக்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். அந்தப் பகுதியில் நடப்பதற்கே பயமாக உள்ளது.
மேலும், அதே பகுதியில் சிவன் கோயில், அம்மன் கோயில், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு அந்த அரசு சாராயக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.