தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு! ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை...

Asianet News Tamil  
Published : Feb 20, 2018, 09:57 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு! ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை...

சுருக்கம்

many lakhs rupee scandal in the individual toilet construction project

தஞ்சாவூர்

தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பேர்நீதிஆழ்வார் தலைமைத் தாங்கினார்.

அப்போது, மக்கள் சார்பில் பேர்நீதிஆழ்வார், வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தார்.

அதில், "நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து தனிநபர் கழிவறை கட்டினால் அரசு ரூ.12 ஆயிரத்து 500 மானியம் வழங்கும் என கூறியதன் அடிப்படையில் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் கழிவறை கட்டினர்.

கட்டும்போது ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக மக்களிடமும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்தனர். ஆனால், மானியத்தொகை ஒரு சிலருக்குத்தான் கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை. ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணம் கிடைக்கவில்லை.

மேலும், கழிவறை கட்டிடத்தின் மேல் பயனாளிகளின் பெயர் மற்றும் ஊராட்சியின் பெயர், திட்டத்தின் மதிப்பீடு தொகை எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் பல இலட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.

எனவே, முழுமையாக பணம் கிடைக்காத பயனாளிகளுக்கு உடனடியாக கழிவறை கட்டிய நிதி கிடைத்திட வழிவகை செய்திடவும், முறைகேடுகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் அபிமன்னன், மாலதி, சுரேஷ், வசந்தி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வட்டார வளர்ச்சி அதிகாரி சூரியநாராயணன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

தேரை இழுத்து தெருவில் விட்ட ஆதவ் அர்ஜுனா.! மீண்டும் ரஜினி அரசியல்.! அரசியல் களம் சூடுபிடிக்குமா?
தமிழகம் தற்போது போதைப் பொருள் மாஃபியாக்களின் கூடாரமாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.