
காஞ்சிபுரம்
மாமல்லபுரத்தில் கடந்த இரண்டு நாள்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு கடல் பலத்த சீற்றத்துடன் இருக்கிறது. மீனவர் படகுகள் ராட்சத அலைகளில் சிக்கி மிதந்து கொண்டிருக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரம் என்ற பெயர் பெற்றது மாமல்லபுரம்.
இங்கு வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் என அனைத்து தரப்பினரும் வருகை தந்து கடற்கரை மணல் பரப்பையும், பல்லவர் காலத்து சிற்பக் கலையையும் ரசித்து செல்கின்றனர். கடலில் குளித்து மகிழ்வதும் உண்டு.
இங்கு, கடந்த இரண்டு நாள்களாக எப்போதும் இல்லாத அளவுக்கு கடல் பலத்த சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பி அச்சுறுத்துகின்றன. கடல் நீர் கரைப்பகுதி வரை உட்புகுந்து குளம் போல தேங்கி நிற்பதையும் காணமுடிகிறது.
மாமல்லபுரம் மீனவர் பகுதியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ராட்சத அலையில் சிக்கி மிதந்து கொண்டிருந்தன.
அலையில் அடித்து செல்லாமல் இருக்க மீன்பிடி வலைகளை, மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் சென்று வைத்தனர்.
இதனால், மாமல்ல்புர கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை போட்டுள்ளனர்.