
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால், பொதுமக்களிடம் செல்போன் OTP விவரங்களை கேட்டக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, தொந்தரவு அளித்து வருகின்றனர். மேலும் திமுகவினர் பொதுமக்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்துகின்றனர்.
ஆவணங்களை தர மறுத்தபோது, வீட்டுப் பெண்கள் மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்தி விடுவதாக மிரட்டினர். மேலும், அனைவரின் தனிப்பட்ட செல்போன் எண்களையும் கேட்கின்றனர். அந்த எண்ணைப் பயன்படுத்தி, திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். மக்களை திமுகவில் சேர வற்புறுத்தி வருகின்றனர். திமுகவில் சேராமல் போனால் தற்போது பெற்று வரும் அரசு திட்டங்கள் நிறுத்தப்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பலர் விருப்பமில்லாமல் கட்டாயத்தின் பேரில் தனிப்பட்ட தகவல்களைப் அளிப்பதுடன், திமுகவில் சேருகின்றனர் என தெரிவித்தார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம். ஆனால் ஓடிபி கேட்கக்கூடாது என்று தெரிவித்து ஓரணியில் தமிழ்நாடு பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக மத்திய அரசு, திமுக பொதுச்செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.