
Chief Minister Stalin health check-up : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரசு திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும், மக்களின் குறைகளை கேட்பதற்காகவும், திமுகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பிற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் பயணம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, ஜூலை மாதத்தில் அவர் திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணத்திற்காகவும் தேதி குறிக்கப்பட்டுள்ளது.
ஓய்வின்றி தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். இது மட்டுமில்லாமல் சென்னையில் தலைமை செயலகத்தில் நிகழ்வுகள், கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருத்துள்ளார். இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிகழ்வு முடிந்ததையடுத்து அரசு நிகழ்ச்சியான அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 762 மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.10,000/- மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் காரில் சென்றார்.
அப்போது திடீரென ஏற்பட்ட உடல் நிலை பாதிப்பு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு முதலமைச்சர் ஸ்டாலினின் உடல் நிலை தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனையானது செய்து வருகிறார்கள். மேலும் 2 நாட்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழா மற்றும் அண்ணா நூலகத்தில் துர்காவுடன் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளவார் என தகவல் கூறப்படுகிறது.