திருவிழா அனுமதிக்குத் தாமதமா? முழு செலவும் போலீஸ் பொறுப்பு! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published : Aug 06, 2025, 10:47 PM IST
Thirupparankundram temple

சுருக்கம்

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களுக்குள் பரிசீலிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற வழக்குச் செலவுகளைத் தவிர்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை 7 நாட்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலதாமதம் காரணமாக, மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுவதால், தேவையற்ற வழக்குச் செலவுகளைத் தவிர்க்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழாவை நடத்த சுரேஷ் குமார் என்பவர், ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி கடந்த ஜூலை 7ஆம் தேதி சூலூர் காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தனது உத்தரவில், "திருவிழாவுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களுக்குள் பரிசீலித்து, உரிய முடிவை காவல்துறை எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய நேரத்தில் பரிசீலிக்காததால், திருவிழாவுக்காக வசூலிக்கப்பட்ட நிதி, வழக்கின் செலவுகளுக்குப் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

காவல்துறைக்கு எச்சரிக்கை

மேலும், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட நேர்ந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரியே விழாச் செலவுகளை ஏற்க நேரிடும் என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் கோவில் திருவிழாக்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி பெறுவதற்கு வழிவகுக்கும் என்றும், தேவையற்ற நீதிமன்ற அலைச்சல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி