
பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு புதிய கார்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு தனியார் கார் நிறுவனத்திற்கு சொந்தமான கார்களை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி பொள்ளாச்சி நோக்கி வந்தது. கண்டெய்னரில் 5 புதிய கார்கள் இருந்தன. பொள்ளாச்சி நகருக்குள் திரும்ப போதிய இடவசதி இல்லாததால், கன்டெய்னர் லாரியை ஓட்டுநர் கோவை ரோட்டில் சி.டி.சி. மேட்டைத் தாண்டி நிறுத்தச் சென்றுக் கொண்டிருந்தார்.
கோவை ரோடு மகாலிங்கபுரம் வளைவு அருகே சென்றபோது, கன்டெய்னர் லாரியின் பின் பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் புளுகாண்டி தலைமையில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
லாரியின் பின்பக்க கதவை திறந்து தீயை அணைத்ததால், உள்ளே இருந்த கார்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கன்டெய்னர் லாரிக்கு 2 டீசல் டேங்குகள் இருந்துள்ளன. இதில் ஒரு டேங்கில் இருந்த டீசல் அனைத்தும் தீர்ந்து விட்டது. அந்த டீசல் டேங்கு பகுதியில்தான் தீடீரென்று தீப்பிடித்தது.
இதில் பின் பக்கத்தில் உள்ள டயர்கள் கருகின. மேலும் டேங்கில் டீசல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் கன்டெய்னர் லாரியில் இருந்த பல இலட்சம் மதிப்புள்ள கார்கள் தப்பின.
தீ விபத்து காரணமாக கோவை ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை காவல்துறையினர் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.