நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர் மலையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங் சென்ற இவர் அங்கேயே யோகா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் வந்த வெங்கடாசலம், குடும்பத்தினருடன். நேற்று தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றார். அப்போது, ரிமோட் விமானம் மூலம் பெரியகோயிலை படம் எடுத்தார்.
திடீரென ரிமோட் விமானம் பெரிய கோயில் அருகே சுற்றி வருவதை பார்த்ததும், தொல்லியல் துறையினர், அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த விமானத்தை இயக்குவது யார் என அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் கோயில் ஊழியர்கள் மூலம் தேடினர்.
அப்போது, வெங்கடாசலம், ரிமோட் மூலம் விமானத்தை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ரிமோட் விமானத்தை பறிமுதல் செய்து வெங்கடாசலத்தை, அருகில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, ரிமோட் விமானத்தை பறக்கவிட்டு படம் எடுக்க கூடாது என்று தனக்கு தெரியாது என்று கூறினார். இதையடுத்து தொல்லியல் துறையினர், அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். இச்சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.