
Kerala IPS officer son arrest : தமிழகத்தில் போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக வாகன சோதனைகள், ஆன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனை, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் DPI எதிரில் உள்ள கல்லூரி சந்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாக நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி போதை பொருள் விற்பனை செய்த போது 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுனீஷ், கேரளா ஐபிஎஸ் அதிகாரி பாலச்சந்தரின் மகன் நிகில் ஆகிய இரண்டு நபர்கள் தொடர்பு இருப்பது தெரியவந்தும். அவர்கள் மூலமாக போதைப்பொருளை பெற்று விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் கேரளா ஐபிஎஸ் அதிகாரி பாலச்சந்தரின் மகன் நிகில் மற்றும் சுனீஷ் ஆகியோரை பெங்களூருவில் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்து சுமார் 10.5 கிராம் மெத்தம்பெட்டமைன் , 1 செல்போன் மற்றும் 1 டேப்லட் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.