தனியார் துறையிலும் இடஒதுக்கீடு; காங்கிரசுடன் இணைந்து பயணிக்க இது தான் காரணம் - கனிமொழி பேச்சு

Published : Apr 12, 2024, 10:51 PM IST
தனியார் துறையிலும் இடஒதுக்கீடு; காங்கிரசுடன் இணைந்து பயணிக்க இது தான் காரணம் - கனிமொழி பேச்சு

சுருக்கம்

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழக்கப்பட வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இது தான் திமுக, காங்கிரஸ் இணைந்து பயணிக்க காரணம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று கலந்து கொண்டார், இக்கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி கலந்துகொண்டார். 

கூட்டத்தில் பேசிய கனிமொழி, இந்திய நாட்டின் எதிர்காலமான ராகுல் காந்தி இங்கு வந்திருக்கிறார். நான் அடிக்கடி ராகுல் காந்தியிடம் சொல்வது, தமிழ்நாடு உங்களை எப்போதும் வரவேற்கக் காத்திருக்கிறது. உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நாங்கள் என்பது தான். அதற்கு உதாரணம் தான் காலையில் இருந்து இங்குத் தகித்துக் கொண்டிருந்த வெயில், ராகுல் காந்தி கால் வைத்த உடன் பூங்காற்றாக மாறியுள்ளது. தமிழகத்தில் இருக்கும் திராவிட மாடலின் தொடர்ச்சியாக இந்த நாட்டின் அரசமைப்பு இருக்க வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர் ராகுல் காந்தி தான்.

வன்முறையும், அட்டகாசமும் செய்வதற்காகவே பிறந்த கட்சி திமுக; அண்ணாமலை கடும் விமர்சனம்

வரக்கூடிய தேர்தல் என்பது நம் முன்னோர்கள் இந்த நாட்டை எப்படிக் காண வேண்டும் என்று கனவு கண்டார்களோ அந்த கனவை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் இது. பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்த்து தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அதானிக்கும், அம்பானிக்கும் பாஜக செய்து கொண்டிருந்த சேவைகளை எல்லாம் கேள்வியாக எழுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக ராகுலை நாடாளுமன்றத்தை விட்டு நீக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தது தான் பாஜக.

எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டும். கேள்வி கேட்கக் கூடிய அத்தனை பேரையும் மௌனமாக்க எதை செய்யவும் தயாராக இருக்கக்கூடிய இயக்கம் தான் பாஜக. இந்த நாட்டில் பேச்சுரிமையை, சாமானிய மக்களின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

விஜயபிரபாகரன் வெற்றி பெற்றால் எனது அப்பாவின் ஆத்மா சாந்தியடையும்; விஜயகாந்தின் மகன் உருக்கமான பேச்சு

எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க கூடிய இயக்கமாக இருப்பது திராவிட இயக்கம். அதன் அடிப்படை கொள்கைகளை இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடிகிறது. தனியார் நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. எனவே தான், இரு கட்சிகளும் இணைந்தே பயணிக்கிறது என்பதை எங்களை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!