
நடிகர் கமல்ஹாசன் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக சாடியுள்ளார். மேலும், அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காகவே திமுக கூட்டணியில் இணைந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
கமல்ஹாசன் மீதான குற்றச்சாட்டுகள்:
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நடிகர் கமல்ஹாசன் இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டார். அப்போது அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்.
மேலும், மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக தி.மு.க. கூட்டணிக்கு சென்றுள்ளார். சினிமா படப்பிடிப்பில் கேமரா முன்பு வந்து பேசிவிட்டு பின்னர் மறந்து விடுவது போல, நிஜவாழ்க்கையிலும் நடந்து வருகிறார். எப்படியாவது நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற சுயநலத்துடன், தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம் செய்துள்ளார். பொதுமக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற முடியாமல், தி.மு.க.வின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்த பதவியைப் பெற்றுள்ளார்," என்று ஆவேசமாகப் பேசினார்.
மதுரை குப்பை விவகாரம்
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது அண்ணன் மு.க. அழகிரியும் சந்தித்துப் பேசியது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்ட வானதி சீனிவாசன், "அண்ணன்-தம்பிகள் பிரிவதும் சேருவதும் இயல்பு.
அதே நேரத்தில், மதுரையில் முதலமைச்சர் பார்வையிடச் சென்றபோது அங்கு குவிந்து கிடந்த குப்பைகளைத் துணி போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் தவறானது. கோவையிலும் பல இடங்களிலும் உள்ள குப்பைகளை இதுபோன்று தான் மறைத்து வைத்து வருகிறார்கள்" என்று தமிழக அரசின் குப்பைப் பராமரிப்பு நிர்வாகம் மீதும் விமர்சனம் வைத்தார்.