மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தன் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி யாக கருதிய காவிரி நினைவு தூணை, திறக்கமல் கண்ணை மூடிவிட்டார். இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தமிழகத்துக்கு, ஆண்டுதோறும், 192 டிஎம்சி, காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என கடந்த 2007 பிப்ரவரி 5ல் காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு கூறியது. ஆனால், அந்த தீர்ப்பு அரசிதழில் வெளியிவில்லை. ஆனால், 2011 சட்டமனற் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, மத்திய அரசு, 2013 பிப்ரவரி 19ம் தேதி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது.
இதை தன் 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என, ஜெயலலிதா கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது.
“என்னை பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில், என் வாழ்க்கையில் கிடைத்த மகத்தான பிரமாண்ட வெற்றி இதுவே. என், 30 ஆண்டுகால அரசியல், பொதுவாழ்வில் இன்று தான், சாதனை புரிந்ததாக நான் மனநிறைவடைகிறேன்.
நான் எவ்வளவோ சாதனைகள் செய்ததாக, எத்தனையோ பேர் பாராட்டினாலும், அதை நான் சாதனையாக கருதவில்லை. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை,அரசிதழில் வெளியிட செய்ததை தான் மகத்தான சாதனையாக கருதி, மனநிறைவு கொள்கிறேன். எனக்கும், என் தலைமையிலான அரசுக்கும், காவிரி டெல்டா விவசாயிகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது”. இவ்வாறு, அறிக்கையில் கூறியிருந்தார்.
இதை பறைசாற்றும் வகையில், மேட்டூர் அணை பூங்காமுன், ஒரு கோடி ரூபாய் செலவில், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின் வாசகங்கள் பொறித்த நினைவு துாண்' கட்டுமான பணி, மார்ச் மாதம் துவங்கியது.
இந்த நினைவு தூணை திறந்து வைக்க, முதல்வர் ஜெயலலிதா மிகவும் ஆர்வத்துடன் இருந்தார். ஆனால், நினைவு தூண் கட்டி முடிப்பதற்கு முன்பாகவே அவர் கண்ணை மூடிவிட்டார். இது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக விவசாயிகளையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.