
சசிகலா, விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் இழக்க செய்வோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தெரிவித்தார்.
விளாத்திகுளத்தின் முன்னாள் எம்.எல்.ஏ செய்தியாளர்களைச் சந்தித்து தனது ஆதரவை முதலமைச்சர் ஒ.பன்னீ செல்வத்திர்கு தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: “கடந்த 22–9–2016 அன்று நள்ளிரவில் ஜெயலலிதாவை சுயநினைவு இல்லாமல் சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தாலும் அவரது உடல்நிலை குறித்து அ.தி.மு.கவின் அடிமட்ட தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த 5–12–2016 அன்று நள்ளிரவில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கின்றனர். அதுவரையிலும் ஜெயலலிதாவின் உடல் நலனில் என்ன பிரச்சினை? அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கவில்லை.
அவரது இறப்பு குறித்து 2 மாதங்களுக்கு பிறகு மருத்துவர்கள் அளிக்கும் விளக்கத்தில் நம்பிக்கை இல்லை. எனவே ஜெயலலிதாவின் இறப்பு குறித்து உண்மை நிலையை கண்டறிய விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற ஒ.பன்னீர்செல்வம் பல்வேறு நிலைகளிலும் திறம்பட பணியாற்றினார். இதனால் பொதுமக்களிடம் அவருக்கு மிகவும் நல்ல பெயரும் கிடைத்தது.
இதனால் அவரை உடனே பதவியில் இருந்து விலக சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். அ.தி.மு.க.வின் கொடியும், இரட்டை இலை சின்னமும் உண்மையான தொண்டர்களுக்கே கிடைக்கும். அதனை பணம் பறிக்கும் கும்பல் ஒருபோதும் கைப்பற்ற முடியாது.
எனவே சசிகலா அல்லாத அ.தி.மு.க.வை ஆதரிப்போம். தமிழகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.
சசிகலா சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட பயப்படுகிறார். அவர் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்க செய்வோம்” என்று அவர் தெரிவித்தார்.