Latest Videos

என்னைப் பேச அனுமதித்து இருந்தால் கிழிகிழின்னு கிழித்திருப்பேன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

By SG BalanFirst Published Jun 27, 2024, 8:15 PM IST
Highlights

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறாமல் இருந்தால் முதலமைச்சர்,  அவர்களை கிழிகிழி என கிழித்து இருப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது பற்றி கேட்டதற்கு பதில் கூறிய ஈபிஎஸ், "பேரவையில் நான் பேசுவதை நேரலை செய்திருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன்" என்று சாடினார்.

சட்டப்பேரவையில் தன்னைப் பேச அனுமதித்து இருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை கிழிகிழி என கிழித்து இருப்பார் என அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு இவ்வாறு பதிலடி கொடுத்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் அமைச்சர்களை விட சட்டப்பேரவைத் தலைவர்தான் அதிகம் பேசுகிறார் என்றும் அமைச்சர் சொல்ல வேண்டிய பதில்களை சபாநாயகரே சொல்லிவிடுகின்றார் எனவும் ஈபிஎஸ் குறை கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி அதிமுகவினர் இன்று உண்ணாவிரதம் நடத்தினர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, தேமுதிக, நாம் தமிழர், புரட்சி பாரதம், இந்திய குடியரசுக் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

உண்ணாவிரத போராட்டத்தின் முடிவில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நெஞ்சை பதற வைத்து உள்ளது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோய்விட்டன. நீதிமன்றம் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு நடைபெறும் என்று நம்புகிறோம்" எனக் கூறினார்.

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது! ஒரே வாரத்தில் 4வது சம்பவம்... பீதியில் பொதுமக்கள்!!

"சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மக்கள் மன்றத்தில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அடுத்தக்க்கட்ட போராட்டம் குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்து முடிவு செய்வோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ், "முதலமைச்சர் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அஞ்சுகிறார். சிபிஐசிடி விசாரணையால் எந்த பயனும் கிடைக்கப்போவது இல்லை. சிபிசிஐடி விசாரணை அரசுக்கு சாதகமாகவே இருக்கும்" என்றார்.

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியேறாமல் இருந்தால் முதலமைச்சர்,  அவர்களை கிழிகிழி என கிழித்து இருப்பார் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது பற்றி கேட்டதற்கு பதில் கூறிய ஈபிஎஸ், "பேரவையில் நான் பேசுவதை நேரலை செய்திருந்தால், கிழி கிழி என கிழித்து இருப்பேன்" என்று சாடினார்.

சட்டமன்றத்தில் அச்சத்தோடு வெளியேறு கின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அச்சம் என்பது எங்கள் அகராதியில், அதிமுக மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்டகட்சி. "பிரதான எதிர்க்கட்சியே சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. அமைச்சரை விட சட்டப்பேரவைத் தலைவர்தான் அதிகம் பேசுகிறார். அமைச்சர் சொல்ல வேண்டிய பதில்களை அவரே சொல்லிவிடுகிறார். அந்த ஆசனம் புனிதமான ஆசனம், அதில் அமர்ந்து உள்ளவர்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.

ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து என்ன பிரயோஜனம். நாங்கள் நாடகம் ஆட விரும்பவில்லை" எனக் கூறினார்.  திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கள்ளச்சாராய மரணங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க குரல் கொடுக்கவில்லை எனவும் திமுகவின் கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் மக்கள் குரலாக ஒலிக்கவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.

அதிமுக உண்ணாவிரதத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவு தெரிவித்திருப்பது பற்றிய கேள்விக்கு பதில் கூறிய ஈபிஎஸ், “மரியாதைக்குரிய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. நேரிலும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளை அனுப்பி வைத்தார். அதற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”  எனத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் கனிமவள கொள்ளை... வேடிக்கை பார்க்கும் மு.க.ஸ்டாலின்...: அண்ணாமலை குற்றச்சாட்டு

click me!