தஞ்சை கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் பலி..! விபத்து நடந்தது எப்படி நேரில் பார்த்தவரின் அதிர்ச்சி தகவல்...

By Ajmal KhanFirst Published Apr 27, 2022, 8:42 AM IST
Highlights

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவில் தொடங்கிய  தேர் திருவிழா அதிகாலை வரை நடைபெறும். அதிகாலை நேரத்தில் தேர் மின் வயர் மீது உரசியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்ந சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 

94 வது வருட தேர் திருவிழா

தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்திற்கான கோயில் உள்ளது. ஆண்டு தோறும் அப்பர் பிறந்த நட்சத்திர தினத்தில் விமர்சையாக சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை திருவிழா தொடங்கியிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இரவு 12  மணிக்கு ஆரம்பமானது. 15 அடி உயரம் கொண்ட தேர் அந்த பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக சென்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை பாரக்க ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் அப்பர் மடத்திற்கு செல்வதற்காகச் சாலையின் வளைவில் தேரை இழுத்துள்ளனர். அப்போது அருகே இருந்த பள்ளத்தில் தேரில் சக்கரம் இறங்கியுள்ளது. தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது. ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேரில் மின்சாரம் பாய்ந்து விபத்து

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, அதிகாலையில் நடைபெற்ற விபத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை 94 வருடமாக சிறப்பான முறையில் தேர்பவனி நடைபெற்றது. ஊர்வலம் முடிந்தது கடைசியாக கோவிலுக்கு  தேர் வந்து சேர வேண்டிய நேரம்
சாலையில் இருந்து தேர் கீழே இறங்கியது அப்போது உயர்மின் அழுத்தம் கொண்ட வயர் மீது தேரின் உச்சி உரசியுள்ளது. உடனடியாக தேர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தேர் முழுவதும் வெடி சத்தத்தோடு வெடித்து சிதறியது. அப்போது தேரின் அருகில் சிக்கியிருந்த சிறுமியை மீட்க ஒருவர் வேகமாக சென்றார் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து தேர் பக்கத்தில் யார் போகவேண்டாம் என கூறி தடுத்தோம், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு தான் அந்த இடத்தில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சேர்க்க முடிந்தது. 

3 சிறுவர்கள் உட்பட 11பேர் பலி

கோயில் திருவிழாவில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 3  சிறுவர்கள் உள்பட 11  பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இதனையடுத்து மருத்துமனையில் உயிரிழந்த உறவினர்களின் உடல்களை கட்டி பிடித்து அழும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 

click me!