கொட்டித் தீர்த்த தென்மேற்குப் பருவமழை; எல்லா அணைகளும் நிரம்பின; இந்த வருடம் தண்ணீர் தட்டுப்பாடே இருக்காதாம்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 30, 2018, 12:23 PM IST
Highlights

நீலகிரியில் இந்த வருடம் கொட்டித் தீர்த்த தென்மேற்குப் பருவமழையால் எல்லா அணைகளும் நிரம்பியுள்ளன. இதனால், போன வருடம் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு இந்த வருடம் நிச்சயம் ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

நீலகிரி
 
நீலகிரியில் இந்த வருடம் கொட்டித் தீர்த்த தென்மேற்குப் பருவமழையால் எல்லா அணைகளும் நிரம்பியுள்ளன. இதனால், போன வருடம் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு இந்த வருடம் நிச்சயம் ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் ஜூன் முதல் ஆகஸ்டு வரை தென்மேற்கு பருவமழை பொழிவது வழக்கம். போன ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு நீலகிரியில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பொழிந்துள்ளது. 

மழை அதிகமாக பொழிந்ததால் நீலகிரி அணைகளான அப்பர் பவானி, எமரால்டு, அவலாஞ்சி, முக்குருத்தி, பைக்காரா, கெத்தை, மரவகண்டி, காமராசர் சாகர், கிளன்மார்க்கன் போன்ற அணைகளின் நீர்மட்டம் சர்ரென்று உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. மழை குறைய ஆரம்பித்த பிறகே அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. 

உதகமண்டலம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டோற் வசிக்கின்றனர். உதகமண்டலத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்களைக் கண்டு இரசிக்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 

உதகமண்டலத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் குடிநீர் தேவையை இங்கிருக்கும் பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. அதன்படி, பார்சன்சுவேலி அணை, டைகர் ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை, மார்லி மந்து அணை போன்ற அணைகள் குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. 

போன வருடம் உதகமண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை குறைந்து காணப்பட்டதால் அணைகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்தது. ஆனால், இந்தாண்டு உதகமண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை அதிகளவில் பெய்துள்ளதால் இந்தமுறை அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

அதன்படி, பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 44 அடியாகவும், டைகர் ஹில் அணையின் நீர்மட்டம் 27.5 அடியாகவும், மார்லிமந்து அணையின் நீர்மட்டம் 17.5 அடியாகவும் உள்ளது. 

தொட்டபெட்டா லோயர், கோடப்பமந்து அப்பர் ஆகிய இரண்டு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உதகமண்டலம் நகராட்சியில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

click me!