சைதை துரைசாமிக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நடிகர் சத்யராஜ் நேரில் ஆறுதல்!

By Manikanda PrabuFirst Published Feb 21, 2024, 5:06 PM IST
Highlights

சைதை துரைசாமி மகன் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் .பி.ராதாகிருஷ்ணன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்

சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப்பிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தார்.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஷங் நாலா பகுதியில் இவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றில் கடந்த 4ஆம் தேதியன்று கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். ஆனால், வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். அதன்பிறகு, தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.

இதையடுத்து, வெற்றி துரைசாமியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 8 நாட்களுக்கு பிறகு அவரது உடல் ஆற்றில் இருந்து கடந்த 12ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சென்னை கொண்டு வரப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. “ஒரு மகன் போனாலும் பல மகன்களும், மகள்களும் எனக்கு இருக்கிறார்கள்.” என தனது மகனை தகனம் செய்த பின்னர் சைதை துரைசாமி உருக்கமாக தெரிவித்திருந்தார்.

ரூ.2500 கோடி மதிப்பிலான மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல்!

சைதை துரைசாமிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில், சைதை துரைசாமி மகன் மறைவுக்கு ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற அவர்கள், வெற்றி துரைசாமியின் புகைப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சைதை துரைசாமிக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

click me!