தமிழகத்தில் முழு ஊரடங்கு.. புதுச்சேரியில் வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்..களையிழந்த காணும் பொங்கல்..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 4:02 PM IST
Highlights

முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்ததால், காணும் பொங்கலில் வழக்கமாக மக்கள் அதிகம் கூடும் பாரதி பூங்கா, கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
 

புதுச்சேரியில் வருடம் வருடம் காணும் பொங்கல் அன்று சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் புதுச்சேரிக்கு காணும் பொங்கலன்று புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் அதிகளவில் வருவார்கள். காணும் பொங்கல் நாளில் மணக்குள விநாயகர்ஆலயம், அன்னை ஆசிரமம், கடற்கரைச் சாலை, பாரதி பூங்கா, பாரதி அருட்காட்சியகம், காந்தி ஆசிரமம், நோணாங்குப்பம் படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் நிரம்பி வழியும்.

ஆனால் கொரோனா ஊரடங்கு, தொற்று பரவல், கட்டுபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் தற்போது நிலைமை மாறிவிட்டது. அதனினும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுகிழமையான இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் தினமான இன்று தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் வர முடியவில்லை. இதனால் வழக்கமாக காணும் பொங்கலால் களைக்கட்டும் சுற்றுலாத்தலங்கள் முற்றிலும் களை இழந்தன.

மேலும் புதுச்சேரியில் கொரோனா தொற்று 50 சதவீதம் அதிகரித்துள்ளதால், உரிய காரணமின்றி தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எல்லையில் காவல்துறையினரின் தீவிர வாகனச் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. உரிய காரணமின்றி தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். 

தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் சில கட்டுப்பாடுகள் மட்டுமே உள்ளன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. இதனால் புதுச்சேரி-தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி-கடலூர் எல்லையான முள்ளோடை, புதுச்சேரி-விழுப்புரம் எல்லையான மதகடிப்பட்டு, புதுச்சேரி- மரக்காணம் எல்லையான காலாப்பட்டு, புதுச்சேரி- திண்டிவனம் எல்லையான கோரிமேடு என அனைத்து எல்லைகளிலும் இரு மாநில காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதில் புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு எந்த வாகனத்தையும் தமிழக போலீஸார் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுச்சேரியில் எந்த தடையும் இல்லாத காரணத்தால் வெளி மாநில மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

புதுச்சேரியில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது காரணமாகவும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் வருகை மிக குறைவாக உள்ளது. இதனால் புதுச்சேரி- தமிழக எல்லைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பாரதி பூங்காவில் சிறார்களும், உள்ளூர் மக்கள் மட்டும் குறைந்த அளவில் வந்திருந்தனர். கடற்கரைச்சாலை அதிகளவில் வெறிசோடியது. படகு இல்லத்திலும் குறைந்தளவே மக்கள் வந்தனர். வாகனங்கள் எல்லைப்பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்டதால் காணும் பொங்கல் இம்முறை களையிழந்தது.

click me!