
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 4 பேரின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் விசை படகுகளில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன் குமாரவேல், சுப்பிரமணி, கார்த்திகை சாமி, நம்பு ஆகிய 4மீனவர்களையும் கைது செய்தனர்.
இதையடுத்து சிறைபிடிக்கபட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று நீதிபதி முன் ஆஜர் படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 54 நாட்களாக சிறையில் உள்ள அவர்களை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது. வாய்தா நாளான நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அவர்களுக்கு மார்ச் 17 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி அலெக்ஸ் ராஜா உத்தரவிட்டார். பின்னர், மீனவர்கள் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.