
மேகதாது அணை விவகாரம்
காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்வதையே தமிழகத்தை ஆளும் திமுக அரசும், கர்நாடகத்தை ஆளும் அதன் கூட்டாளி காங்கிரஸ் அரசும் செய்துவந்த நிலையில், போதாக்குறைக்கு தற்போது மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் கங்கணம் கட்டிக்கொண்டு முனைப்புகாட்டி வருவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழகத்திற்கு மாபெரும் துரோகம்
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய மத்திய அரசு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரு. VSOMANNA_BJP அவர்களை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகமாகும். ஏற்கனவே காவிரி மேகதாது பிரச்சனையில் தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,
நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டிய மத்திய அமைச்சர் மேகதாது பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேசியதாக ஊடகங்களில் வந்த செய்தி டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை ஆளும் பொம்மை முதலமைச்சர் பேசா மடந்தையாக இருப்பதன் காரணம் புரியவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.