பாஜகவிற்கு எதிராக களமிறங்கும் எடப்பாடி.! மத்திய அரசை எதிர்த்து போராட்டத்திற்கு தேதி குறித்த அதிமுக

By Ajmal KhanFirst Published Jul 4, 2024, 6:27 PM IST
Highlights

புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும்; இந்த விஷயத்தில் திமுக-வின் இரட்டை வேடத்தைக் கண்டித்தும் அதிமுக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டமானது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் அறிமுகப்படுத்துள்ள புதிய சட்டத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்காமல் இந்தியை திணிப்பதாக கூறியுள்ளது. இதனை எடுத்து மத்திய அரசுக்கு எதிராக முதல் முறையாக அதிமுக சார்பாக போராட்டம் அறிவித்துள்ளார்..

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய பா.ஜ.க. அரசால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, 1.7.2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், மேற்படி 3 புதிய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் கலந்த இந்தியில் பெயர் வைத்து அப்பட்டமான இந்தித் திணிப்பு செய்துள்ளதைக் கண்டித்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டக் கோரியும், மேலும் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக திமுக-வின் இரட்டை வேடத்தை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் நாளை (5.7.2024) நண்பகல் 12 மணிக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக, கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை, Ex. M.L.A., அவர்கள் தலைமையில் அறவழியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Latest Videos

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக வழக்கறிஞர் நிர்வாகிகளும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

click me!