
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் நின்றபடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனால் டென்ஷனான இபிஎஸ் “ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா. என்ன அடிக்கடி இந்த மாதிரி வந்துட்டு இருக்கீங்க? அந்த ஆம்புலன்ஸ்ல நோயாளி இருக்காங்களானு பாருங்க. வண்டிய நிறுத்துப்பா என்று கூறி ஆவேசமடைந்தார்.
வீடியோ வைரல்
இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, இங்க மட்டும் இல்லைங்க கூட்டம் நடக்குற எல்லா இடத்துலயும் இப்படி தான் பன்றாங்க. இது தான் இவங்க வேலையே. இனி நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டு வரும் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம்
இந்நிலையில் தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து. அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது
நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது. இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.