
திண்டுக்கல்
அரசின் வீடு மற்றும் கழிப்பிடம் கட்டும் திட்டத்திற்கு இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுத்தும், கட்டாயப் படுத்தியும் வேலை வாங்குவதைக் கண்டித்து ஊரக வளர்ச்சி அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம்”, “தனிநபர் கழிப்பிடம் கட்டுதல் திட்டம்”, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்” ஆகியவை ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் கட்டுமானப் பொருட்களுக்கும், தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்த நிலையில் வீடு, கழிப்பிடம் கட்டுவதில் இலக்கு நிர்ணயித்து நெருக்கடி கொடுப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை மேற்கொள்வதிலும் அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதற்காக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மகுடபதி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர் வீரகடம்பகோபு, மாவட்டப் பொருளாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதனையடுத்து மாவட்டம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று மாலை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக வழக்கமான பணி முடியும் நேரத்துக்கு முன்பு, மாலை 4.45 மணி முதல் பணியைப் புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.