குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்; இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு…

First Published Aug 1, 2017, 7:51 AM IST
Highlights
More than 50 women are asking for drinking water Two hours traffic impacts


தருமபுரி

அரூரில் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பொன்னேரி அடுத்துள்ளது ஈட்டியம்பட்டி. இந்தப் பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அப்பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று ஈட்டியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள அரூர் - திருவண்ணாமலை செல்லும் சாலையில் வெற்றுக் குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த அரூர் தாசில்தார் செல்வராஜ் மற்றும் அரூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பெண்கள் சாலை மறியலைக் கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

click me!