
ரேஷன் வாங்க சென்றவர் மாரடைப்பால் மரணம்
கோவை, மேட்டுப்பாளையம் அருகே மலைக் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி 3 கி.மீ வரை தூக்கி சென்ற கிராம வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி, கடமான்கோம்பை பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் மணி (45) என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் பில்லூர் அணைப் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
உடலை டோலியில் தூக்கி சென்ற மக்கள்
இதனை தொடர்ந்து இறந்த மணியின் உடலை அப்பகுதி மக்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தால் டோலி கட்டி தூக்கி சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வரும் நிலையில் பாஐக மாநில தலைவர் அண்ணாமைல வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த நெல்லித்துறை பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ள இந்தப் பகுதியில், ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.
நிதி என்ன ஆச்சு.?
மத்திய அரசின் திட்டங்களுக்குப் பெயரை மாற்றுவதில் மட்டும் முனைப்புடன் இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஒரு நாள் விளம்பரத்துக்காக, வெற்று அறிவிப்புகளை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாய் அவர்கள் கொண்டு வந்த பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, 2022-2023 ஆம் ஆண்டிற்கு, ₹2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். எங்கே சென்றது இந்த நிதி? யாரை ஏமாற்ற இந்த வெற்று அறிவிப்புகள்? இந்தத் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா?
மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது?
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளில், மத்திய அரசின் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், மலைக் கிராமங்களில் சாலைகள் அமைக்க மத்திய அரசு பெருமளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது. ஆனால், தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கிறதென்றால், இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? இனியும் தாமதிக்காமல், தமிழகம் முழுவதும், சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு, உடனடியாக சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.