போதையில் கீழே விழுந்த குடிகாரன்; உதவி செய்தவரை சாராய பாட்டிலால் குத்தி கொன்ற கொடூரம்...

First Published Jun 15, 2018, 9:22 AM IST
Highlights
Drunker cruelly killed the man who help him by liquor bottle ...


இராமநாதபுரம்
 
இராமநாதபுரத்தில் போதையில் கீழே விழுந்த குடிகாரனுக்கு உதவி செய்து குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியவரை அந்த குடிகாரன் சாராய பாட்டிலால் குத்தி கொன்றான். 

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள தெற்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). வியாபாரியான இவர் ரெகுநாதபுரம் அருகே உள்ள ஆர்.மேலூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் சாராயக் கடையின் அருகில் சாராயம் குடிக்க வருபவர்களுக்கு டம்ளர் உள்ளிட்ட பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தார். 

நேற்று வழக்கம்போல கிருஷ்ணன் அந்தப் பகுதியில் நின்றுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தெற்கூரைச் சேர்ந்த துரைச்சாமி மகன் போஸ் என்ற கட்டைபோஸ் (35) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் குடிபோதையில் தவறி விழுந்துள்ளார். 

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதைக் கண்ட கிருஷ்ணன் அங்கு சென்று அவருக்கு உதவி செய்து "அளவோடு குடிக்க வேண்டியது தானே! என்று அறிவுரை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கட்டைபோஸ் கிருஷ்ணனை கண்டித்ததுடன் சாராய பாட்டிலால் அவரை தலையில் தாக்கினாராம். 

இதனைக் கண்ட அப்பகுதியினர் ஓடிவந்து கட்டைபோசை கண்டித்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து செல்வதுபோல் நடித்துவிட்டு மீண்டும் பின்னால் வந்து சாராய பாட்டில் மற்றும் கத்தியால் கிருஷ்ணனை குத்தி உள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு சாராய போதையில் கிடந்த கட்டைபோஸ் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா அங்கு விரைந்து சென்று விசாரணை செய்ததுடன் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனின் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருப்புல்லாணி காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை செய்யப்பட்ட கிருஷ்ணனுக்கு மாலதி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!