புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் சாராயம் குடிக்க பணம் தராத தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகனை காவலாளர்கள் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்தவர் சேகர்(50). விவசாயியான இவருக்கு மணிகண்டன், அருண் (27) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் அருண் சரியாக வேலைக்கு செல்லாமல், தந்தை சேகரிடம் அடிக்கடி சாராயம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம். இதனால் குடிப்பழக்கத்தை கைவிட்டு வேலைக்கு செல்லுமாறு அருணுக்கு, சேகர் பலமுறை அறிவுரை கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவு சாராயம் குடிக்க பணம் கேட்டு சேகரிடம், அருண் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சேகர் பணம் இல்லை என்று கூறி திட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அருண் அருகே கிடந்த அரிவாளால் சேகரை தந்தை என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சேகர் மயங்கி விழுந்தார். பின்னர், அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சேகரின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில், ஆதனக்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து அருணை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகின்றது.
சாராயத்துக்காக தந்தையை அரிவாளால் மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.