இப்படியே போச்சுனா! இளைஞர்களை சீரழித்தது திமுக தான்! வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவாகும்!அன்புமணி வார்னிங்

By vinoth kumarFirst Published Jul 30, 2024, 6:22 PM IST
Highlights

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம்  திமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக் கொண்டு, அவரை திமுகவிலிருந்து நிரந்தரமாக  நீக்கியிருக்கிறது.  

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு திமுக அடைக்கலம் கொடுத்திருக்கிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர்வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையிலிருந்து இராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த  ரூ. 70 கோடி மதிப்புள்ள மொத்தம் 6.93 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருளை காவல்துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக  இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல  உரிமைப்பிரிவு  துணைத் தலைவர்  செய்யது இப்ராகிம் என்பவர் உள்ளிட்ட மூவரை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருக்கின்றனர்.

Latest Videos

இதையும் படிங்க: ரூ.70 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கு! சையது இப்ராஹிம் திமுகவிலிருது நிரந்தர நீக்கம்!

போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய செய்யது இப்ராகிம்  திமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதை அக்கட்சியின் தலைமையும் ஒப்புக் கொண்டு, அவரை திமுகவிலிருந்து நிரந்தரமாக  நீக்கியிருக்கிறது.  போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது திமுக நிர்வாகி செய்யது இப்ராகிம்.  இதற்கு முன் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட போது, அவரது பின்னணியை ஆய்வு செய்தா கட்சியில் சேர்க்க முடியும்? என்று திமுக வினா எழுப்பியது.  இப்போது  செய்யது இப்ராகிம் என்ற இன்னொரு திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்து திமுக என்ன சொல்லப் போகிறது? ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பிறகும் திமுக நிர்வாகிகளின் சட்டவிரோத செயல்களை திமுக தலைமையும், ஆட்சித் தலைமையும் அனுமதித்திருக்கிறது என்பது தான் இதன் பொருள்.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரத்தை பரப்பி அனைத்து வகை சீரழிவையும் ஏற்படுத்தியவர்களுக்கு திமுக அடைக்கலம் கொடுத்திருக்கிறது.  போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்ட பிறகு அவரை நீக்குவதன் மூலமாக மட்டும் இதிலிருந்து திமுக  தப்பித்துக் கொள்ள முடியாது. போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக விளக்கம் அளிக்க வேண்டும்.

இராஜாஜி, ஓமந்துரார், காமராசர், அண்ணா ஆகியோர் கடைபிடித்த கொள்கைகளால் மது என்றால் என்னவென்றே தெரியாத தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் உருவானது. ஆனால்,  மதுவிலக்கை திமுக அரசு ரத்து செய்ததால் 3 தலைமுறைகள்  மதுவுக்கு அடிமையாகி  வாழ்க்கையை தொலைத்து விட்டன. இப்போது போதைப் பொருள் என்ற பெரும் தீமை தமிழ்நாட்டில் பரவுவதற்கு திமுகவினரே காரணமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தும் அதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு  தான் குற்றவாளிகளை பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க:  ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு.. மாணவர் சமுதாயம் எதை நோக்கிப் பயணிக்கிறது? கவலையில் ராமதாஸ்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது விழித்துக் கொண்டு போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக இளைஞர்களை மதுவைக் கொடுத்தும், போதைப் பொருட்களை புழங்க விட்டும் சீரழித்தது திமுக தான் என்று தமிழ்நாட்டு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவாகும் நிலை உருவாகும்  என தெரிவித்துள்ளார். 

click me!