வரதட்சணை கொடுமை செய்த கணவன்; 2-வது திருமணம் செய்துகொண்டதால் கணவன் உள்பட எட்டு பேர் மீது மனைவி புகார்...

First Published Jan 6, 2018, 7:43 AM IST
Highlights
Dowry harassed husband Wife complains to eight people including husband


இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் வரதட்சணை கேட்டு சித்தரவதை செய்ததோடு கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த மனைவி, கணவன் உள்பட எட்டு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் கற்பகவள்ளி (32). இவருக்கும், இராமநாதபுரம் அருகில் உள்ள இலாந்தை ஊராட்சிக்கு உள்பட்ட அச்சங்குடியைச் சேர்ந்த ராம்குமாருக்கும் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில், கற்பகவள்ளியை அவரது பெற்றோர்களிடமிருந்து வரதட்சணை வாங்கி வருமாறு வற்புறுத்திய ராம்குமார் அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டுள்ளார். கற்பகவள்ளி வரதட்சணை தர மறுத்ததால் அவருடன் வாழாமல், இராமநாதபுரம் அடுத்துள்ள அச்சடிபரம்பு கிராமத்தைச் சேர்ந்த குப்பு மகள் காளீஸ்வரியை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் ராம்குமார்.

வரதட்சணை வழங்காததால் தன்னை சித்திரவதை செய்ததுடன், இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ராம்குமார், இவரது தந்தை ஆண்டி, தாய் செல்லம்மாள்  மற்றும் ராம்குமாரின் இரண்டாவது மனைவி காளீஸ்வரி, இவரது தந்தை குப்பு,  தாய் முத்துக்காளி, சகோதரர்கள் கனி, தேவேந்திரன் ஆகிய எட்டு பேர் மீதும் கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கற்பகவள்ளி புகார் கொடுத்தார்.

அந்த புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் முத்துலெட்சுமி அவர்கள் எட்டு பேர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

click me!