மருத்துவர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு; 18 ஆயிரம் பேர் பங்கேற்பு; நெருக்கடியை சமாளிக்குமா எடப்பாடி அரசு?

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 31, 2018, 7:29 AM IST
Highlights

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்தி செப்டம்பர் 21-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர் மருத்துவர்கள். இதில் 18 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

பெரம்பலூர்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்தி செப்டம்பர் 21-ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர் மருத்துவர்கள். இதில் 18 ஆயிரம் பேர் பங்கேற்பர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து அரசு மருத்துவர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் செப்.21 ஆம் தேதி முழு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில்.

அனைத்து அரசு மருத்துவர் சங்க நிர்வாகிகளில் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், புறநகர் பேருந்து நிலையத்தி அருகில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மருத்துவர் செந்தில் பங்கேற்றார். அவர், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், "மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து  செப்டம்பர் 1 (அதாவது நாளை) முதல் மருத்துவக் கல்லூரி ஆய்வுப் பணிகளைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை நோக்கிப் பேரணி நடத்தவுள்ளோம்.

அப்போதும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 21-ஆம் தேதி  மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்தப் போராட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வேலை செய்யும் 18 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்பர்" என்று தெரிவித்தார்.

click me!