கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கேட்டால் கொடுக்காதீங்க! கலெக்டர் எச்சரிக்கை - ஏன் இப்படி சொல்கிறார்?

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 22, 2018, 10:04 AM IST
Highlights

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் பெயரில் கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கேட்டு யாராவது அணுகினால் அவர்களிடம் நிவாரணப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளர் பெரம்பலூர் ஆட்சியர். 
 

பெரம்பலூர்

நிவாரணப் பொருட்களைப் பெற தனி நபருக்கோ அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கோ மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. எனவே, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் பெயரில் கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கேட்டு யாராவது அணுகினால் அவர்களிடம் நிவாரணப் பொருட்களை கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளர் பெரம்பலூர் ஆட்சியர். 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கேரள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மக்களின் துயர் நீக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

கேரள மக்களுக்கு தாங்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலக தாசில்தாரிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கேரளாவிற்கு மாவட்ட நிர்வாகமும் உதவி வருகிறது. 

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களைப் பெற தனி நபருக்கோ அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கோ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு யாராவது அணுகினால் அவர்களிடம் நிவாரணப் பொருட்களை கொடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். 

மாறாக ஆட்சியர் அலுவலக இயங்கும் பேரிடர் வேலாண்மை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு ஆண், பெண், குழந்தைகள் பயன்படுத்த ஆடைகள், அரிசி, பருப்பு வகைகள், உணவுப் பொருட்கள், தண்ணீர் புட்டிகள், மசாலாப் பொருட்கள், சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய், மெழுகுவர்த்தி, டார்ச், பேட்டரிகள், தீப்பெட்டி, வாளிகள், குவளைகள், பேஸ்ட், பிரஸ், மருந்து வகைகள், ஸ்டவ் அடுப்பு போன்றவற்றை நிவாரணப் பொருட்களாக வழங்கலாம். 

பயன்படுத்தியப் பழையப் பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மைத் துறையை அணுகலாம்" என்று அதில் கூறியுள்ளார்.

click me!