எடப்பாடி பழனிச்சாமிக்கு புது சிக்கல்; முதல்வர் இப்படி பேசலாமா? கண்டிக்கும் ஜாக்டோ - ஜியோ...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 31, 2018, 6:59 AM IST
Highlights

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

பெரம்பலூர்
 
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.க. கூட்டம் ஒன்றில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து தரக் குறைவாக விமர்சித்துப் பேசினார், இந்த உரையாடல் வலைத்தளங்களில் பரவி அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், "முதல்வரே தன்னுடைய ஆட்சியின்கீழ் இயங்கும் ஊழியர்கள் குறித்து உண்மைக்கு மாறாக அவதூறாக பேசலாமா" என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

எடப்பாடி பழனிச்சாமியின் இத்தகையப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கடும் கண்டனம் தெரிவித்தும் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் நேற்று ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக் குறைவாகவும், அவதூறாகவும் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவரும், ஜியோ ஒருங்கிணைப்பாளருமான தயாளன், தமிழ்நாடு உயர்நிலை -  மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவரும், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளருமான ராமர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளரும், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளருமான அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர். 

இதில், தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலாளர் துரைசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் குமரிஅனந்தன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

மேலும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைக் கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர். 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறைச் சாலைப் பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் நன்றித் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

click me!