கடலூரில் பாமக வேட்பாளர் நான் தான்: இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம்!

By Manikanda PrabuFirst Published Mar 22, 2024, 5:32 PM IST
Highlights

கடலூரில் பாமக வேட்பாளர் நான் தான் போட்டியிடுகிறேன் என இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்துள்ளார்

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக ஆகிய  இரு கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இரு கட்சிகளுமே பாமகவின் கோரிக்கையான ராஜ்யசபா சீட் வழங்க ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இழுபறி நீடித்து வந்தது. அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என ராமதாசும், பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என அன்புமணி ராமதாசும் விருப்பம் காட்டி வந்தனர். அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இறுதியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாமக உறுதி செய்தது.

அதன்படி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - இயக்குனர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - அரசாங்கம், சேலம் - ந.அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

இதனிடையே, கடலூர் மக்களவை தொகுதி இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதற்கு தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.” என இயக்குனர் தங்கர்பச்சான் விளக்கம் அளித்துள்ளார்.

click me!