இந்த தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை... தி.மலை ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 14, 2022, 6:58 PM IST
Highlights

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கொரோனா பரவலை தடுக்க ஜன.17, 18 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 20,911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 20,911 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 17, 18 ஆகிய தினங்களில் பக்த்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தோற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தமிநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினங்களான ஜனவரி 17 ஆம் தேதி காலை 04.14 மணி முதல் ஜனவரி 18 ஆம் தேதி அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

click me!