தீபாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு - பேனர் வைத்த தூத்துக்குடி அதிமுகவினர்…!

First Published Dec 28, 2016, 12:52 PM IST
Highlights


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், அதிமுகவை வழி நடத்தும் பொது செயலாளர் பதவி இதுவரை காலியாகவே உள்ளது. இந்த பதவியை ஏற்கும்படி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை, கட்சியின் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அவர், மவுனம் காத்து வருகிறார்.

இதனிடையே சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தெடுக்கக்கூடாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். இதைனை தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுகவுக்கு  தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர்கள் வைத்து வருகின்றனர்.

தீபாதான் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தீபாவுக்கு தமிழகம் முழுவதும் அடிமட்ட தொண்டர்களிடம் இருந்து பெருத்த ஆதரவு கிடைத்து வருகிறது.

ஒருபுறம் சசிகலாவை பொது செயலாளர் பதவியை ஏற்குமாறு அதிமுக நிர்வாகிகள் போஸ்டர், பேனர், கட்அவுட் வைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதிமுக தொண்டர்கள் சிலர், சசிகலா படம் போட்ட போஸ்டர், பேனர்களை கிழித்தெறிகின்றனர்.

மேலும், அதிமுகவுக்கு எதிராக ஜெயலலிதா மற்றும் தீபாவின் படத்தை வைத்து பெரிய டிஜிட்டல் கட்அவுட், போஸ்டர், பேனர்களை வைத்து, அதிமுகவை வழி நடத்த வர நீங்கள் வரவேண்டும் என்ற வாசகத்துடன் பல பகுதிகளில் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு தீபாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் பேனர் வைத்துள்ளனர். அதில், “அம்மாவின் மருமகளே தமிழகத்தின் திருமகளே அதிமுகவை காக்க அம்மா (எ) ஜெ. தீபாவை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்” என்று எழுதப்பட்டுள்ளது.

மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, தீபாவின் படமும் இடம் பெற்றுள்ளது. அதிமுக தொண்டர்கள் தீபாவுக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

click me!