யாரும் எதிர்பார்க்காத விதத்தில்..சொல்லி அடித்த முதலமைச்சர்.. மகிழ்ச்சியில் பாராட்டிய கம்யூனிஸ்ட் கட்சி..

By Thanalakshmi VFirst Published Jan 19, 2022, 9:34 PM IST
Highlights

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 26 ஆம் தேதி நாடுமுழுவதும் 75 ஆவது குடியரசு தினவிழா கொண்டாடபடவுள்ளது. குடியரசு தின விழாவையொட்டி புது டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும். அப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். இந்த அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது.மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும் வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக்கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்பட்டது. இதற்கு தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஒன்றிய பாஜக அரசால் அனுமதி மறுக்கப்பட்ட
தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை

சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுக்கச் செய்யும்
தமிழக முதல்வருக்கு பாராட்டு!

— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim)

ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கப்பதற்கு நிராகரிப்பட்டது ஏமாற்றமளிக்கிறது. எனவே பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதனைதொடர்ந்து மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அலங்கார ஊர்திகளில், சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று சுதேசி கப்பல் கம்பெனி நடத்தி தனது சொத்துகளை எல்லாம் இழந்து ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடியதால் இரட்டை தீவாந்திர தண்டனை பெற்ற வ.உ.சி, மகாகவி பாரதியார் மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்தை எதிர்த்து போராடிய வீரத்தாய் வேலுநாச்சியார் போன்றவர்களுடைய உருவங்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதையும் ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ள ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும் எனக் கூறியுள்ள பாலகிருஷ்ணன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் எனவும், இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல முக்கிய நகரங்களுக்கு மக்களின் பார்வைக்காக இந்த ஊர்திகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சார்பில் வரவேற்பையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும், மாவட்டங்களில் இந்த அலங்கார ஊர்திகளுக்கு கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமெனவும் கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம் எனவும் கூறியுள்ளார்.

click me!