இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக சான்றிதழ்.. உறவினர்கள் அதிர்ச்சி..

By Thanalakshmi VFirst Published Jan 19, 2022, 9:03 PM IST
Highlights

கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா காரணமாக உயிரிழந்த ஒருவருக்கு இந்த மாதம் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டதாக வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் தற்போது 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தமிழகத்திலும் தடுப்பூசி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து பயனாளிகளுக்கு தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் சில இடங்களில் தடுப்பூசி டார்கெட்டை முடிப்பதற்காக முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார்கள் எழுந்து வருகிறது. உயர் அதிகாரிகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அரசு ஊழியர்கள் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி அருகே கடந்த மே மாதமே உயிரிழந்த ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியதாக வந்த தகவலால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி உயிரிழந்தார். முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட ராஜப்பா கொரோனா காரணமாக இருந்ததாகவும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதியன்று அவருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் ராஜப்பாவின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளனர் அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் ஜவனரி 18ஆம் தேதி, கடந்த வருடம் மே மாதமே உயிரிழந்த ராஜப்பாவுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவரது ஆதார் எண்ணை குறிப்பிட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதமே ராஜப்பா உயிரிழந்த நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அவருக்கு எப்படி தடுப்பூசி செலுத்தியிருக்க முடியும் எனவும், இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!