மக்களவைத் தேர்தல் 2024: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

By Manikanda PrabuFirst Published Mar 18, 2024, 5:14 PM IST
Highlights

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  மார்ச் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. எனவே, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என இந்த முறை மும்முனை போட்டி நிலவவுள்ளது. அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகளுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்: திருச்சியில் துரை வைகோ போட்டி - மதிமுக அறிவிப்பு!

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் தொகுதியில் கே.சுப்பராயன், நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!