நம்ம செஸ்...நம்ம பெருமை... ஒலிம்பியாட் போட்டி பேருந்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Jul 1, 2022, 3:08 PM IST
Highlights

ஒலிம்பியாட் செஸ் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒலிம்பியாட் பேருந்தை துவக்கிய முதலமைச்சர்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் செஸ் ஒலிம்பியாட் பேருந்துகளை சென்னை கடற்கரை சாலையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் , செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 188 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவில் , அதுவும் தமிழ்நாட்டில் முதல்முறையாக போட்டிகள் நடத்தப்படுவதால் போட்டிகளை சிறப்பாக நடத்த அனைத்து விதமாக ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  போட்டிகளை நடத்த தமிழக அரசு சார்பில் 92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்த முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை.. பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு..

ஜோதி ஓட்டத்தை துவக்கிய பிரதமர்

போட்டிக்கான லோகோவை கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் அறிமுகப்படுத்தியதோடு, போட்டிக்கான கவுண்டவுனையும் துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை கடந்த 19 ஆம் தேதி பிரதமர் துவக்கி வைத்தார். இந்த ஜோதி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 75 நகரங்களுக்கு சென்று வரும் ஜூலை 27 ஆம் தேதி போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரத்துக்கு வந்தடையவுள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பேருந்துகளில் போட்டிகள் குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நம்ம செஸ், நம்ம பெருமை என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை காமராஜர் சாலையில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். 

சர்ச்சையாகும் தற்காலிக ஆசிரியர் நியமனம்.. மொட்டை அடித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்.. அரசு எடுத்த அதிரடி முடிவு

15 பேருந்துகளில் விளம்பரம்

இந்நிகழ்வில் அமைச்சர்கள் நேரு, மெய்யநாதன், சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அபூர்வா மற்றும்  அதிகாரிகள் பங்கேற்றனர். 5 சென்னை மாநகர பேருந்துகள், 5 தொலை தூரம் செல்லும் சொகுசு பேருந்து, 5 தொலை தூரம் செல்லும் குளிர் சாதன பேருந்துகள் என மொத்தம் 15 பேருந்துகளில் இந்த விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை ஆந்திரா, கேரள, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கமான வழித்தடங்களில் , இந்த பேருந்துகள் பயணிக்கவுள்ளன.

இதையும் படியுங்கள்

ENG vs IND டெஸ்ட் போட்டி டாஸ் ரிப்போர்ட்..! இந்திய அணியில் செம சர்ப்ரைஸ்.. புஜாரா ஓபனிங்

 

click me!