தீ விபத்து ஏற்பட்டுள்ள தி. நகர் சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை அமைந்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், தி.நகரில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் , ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட கடைப் பகுதிகள், தீவிபத்து காரணமாக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகராயர் நகர் சென்னை சில்க்ஸ் கடைகளில் உள்ளே இன்று அதிகாலை முதலே தீ பற்றி எரிந்து புகை வெளியேறுவதால் அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தி.நகர் உஸ்மான் சாலையில் மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க தி.நகர் பகுதிக்கு வரவேண்டாம், அதிக கூட்டம் கூடுவது தீயணைப்பு பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அதிகாலை முதலே தீ பற்றி எரிவதால் புகைமூட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
தரைத்தளத்தில் தீவிபத்து நிகழ்ந்துள்ளதால் மேல் தளங்களுக்கும் தீ பரவியுள்ளதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். கடையில் 7 வது தளத்தில் இருந்து இதுவரை 14 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் நேரவில்லை.
குமரன் சில்க்ஸ் கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள மற்ற கடைகள் எதையும் திறக்கவேண்டாம். அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை என கூறியுள்ளனர்.
மேலும், இந்த பகுதிக்கு வரும் யாரும் தங்களது வாகனங்களையும் சாலையில் நிறுத்தாமல் வேறு பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்துங்கள். தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இதுவரை கண்டறிய முடியவில்லை, ஆனால் மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.
முதலில் தற்போது பற்றியெரியும் தீயை அணைத்துவிட்டு விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.