
சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும், நடுவழியிலேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் செய்வதறியாது மக்கள் திகைத்தனர். இன்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்ப பேருந்து நிறுத்தங்களுக்கு வந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. பஸ்கள் இயங்காததால், வேறு வழியின்றி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் உள்ளூரில் செல்லும் இடங்களுக்கு பயணித்தனர். மேலும் சென்னையில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. புறநகர்ப் பயணிகள் மின்சார ரயில்களில் தொங்கிக் கொண்டு சென்றனர்.
சென்னையை தொடர்ந்து மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பேருந்துகள் நிறுத்தப் பட்டதால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவு பெறாத நிலையில், போக்குவரத்துப் பணியாளர்கள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களின் தொழிற்சங்க நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
அரசு அறிவித்துள்ல 2.40 காரணி ஊதிய உயர்வுக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதை அடுத்து, சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.