ஏக்கருக்கு 2 லட்சம்... லஞ்சம் வாங்கிக் குவிப்பதாக அமைச்சர் மூர்த்தி, உதவியாளர் மீது புகார்

By SG BalanFirst Published Jan 6, 2024, 3:53 PM IST
Highlights

அமைச்சர் மூர்த்தி தன்னைக் கேட்காமல் மதிப்பு நிர்ணய உத்தரவுகள் போடக்கூடாது என்று மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லஞ்சத் தொகை வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டாக மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயத்திற்கு லஞ்சம் பெறப்பட்டு வருவதாக  அமைச்சர் மூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மாநில லஞ்ச ஒழிப்புக் கூட்டமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான சோம. ராஜலிங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 9 பேருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Latest Videos

அதில், கடந்த ஒரு வருட காலமாக தமிழகத்தில் மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயத்திற்கு அளிக்கப்பட்ட கோப்புகளை அமைச்சர் மூர்த்தி தன்னைக் கேட்காமல் மதிப்பு நிர்ணய உத்தரவுகள் போடக்கூடாது என்று மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒரு ஏக்கர் மதிப்பு நிர்ணயத்திற்கு ரூ.2 லட்சம் லஞ்சத் தொகை வசூலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க... UPI மோசடியில் இருந்து தப்பிய மும்பை பெண் எச்சரிக்கை!

எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தொகை செலுத்தி, அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளருக்கு அலைபேசியில் ஓ.கே. என்று சிக்னல் கொடுத்தால் தான் மனைப்பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சட்டவிரோதமாக வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் சோம. ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர் லஞ்சம் வாங்குவதை தடுக்காமல் அவருக்கு உதவுகிறார்கள் என்றும் லஞ்சம் வாங்க உதவுவதும் குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் ராஜலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். "பல ஆயிரக்கணக்கான ஆவணங்கள் பதிவு செய்ய முடியாமல் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாறலாம். சட்டம் மாறாது என்பதை கவனத்தில் கொள்ளவும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி லஞ்ச வழக்கில் 3 வருட கடுங்காவல் தண்டனை கிடைத்த பிறகும் அமைச்சர் மூர்த்தி இவ்வாறு செயல்படுவதால் மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் இதில் தலையிட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதிப்பு நிர்ணயத்திற்காக விண்ணப்பித்து ஆவணம் தாக்கல் செய்து 21 நாட்களுக்குள் மதிப்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டியுள்ள சோம. ராஜலிங்கம், அனைத்து மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களை ஆய்வு செய்து, லஞ்சம் பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரே நாளில் 150 முறை ஜப்பானை உலுக்கிய தொடர் நிலநடுக்கங்கள்... விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?

click me!