டீசல் பேருந்து ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்!

By Manikanda PrabuFirst Published Dec 24, 2023, 11:01 AM IST
Highlights

டீசல் பேருந்து ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது

டீசல் பேருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்து அவற்றை மின்சார பேருந்துகளாக மாற்றி கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பருவ நிலை மாற்றத்தின் பிடியில் உலகமே சிக்கித் தவித்து கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு, சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும்  உள்ள 169 நகரங்களுக்கு 57 ஆயிரம் கோடி செலவில் 10 ஆயிரம் மின்சார பேருந்துகளை மத்திய மாநில நிதியுதவியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2030க்குள் 50,000 மின்சார பேருந்துகள் இந்தியாவில் இயங்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் டீசல் உமிழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு காற்று மாசு பெருமளவில் குறைவதோடு பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கும். 

இந்நிலையில், தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் நகர பயன்பாட்டிற்காக 552 தாழ்தள 'டீசல் பேருந்துகளை' அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து பெற போவதாகவும், இந்த பேருந்துகளுக்கு ஜெர்மன் அபிவிருத்தி வங்கியின் (KFW) கடனுதவி பெறப்படுகிறது என்றும், அடுத்த வருடத்திற்குள் இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. நகரங்களுக்காக, தமிழக அரசு புதிய பேருந்துகள் பெறுவது வரவேற்கபட வேண்டிய அதே நேரத்தில், அவை 'மின்சார பேருந்து'களாகத்தான் அமைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இனி எதிர்காலத்தில் நகரங்களுக்கான பேருந்துகள் அனைத்துமே மின்சார பேருந்துகளாகத்தான் இயக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துள்ள நிலையில், இந்த 552 பேருந்துகளையம் மின்சார பேருந்துகளாக பெற வேண்டும் என்பது இன்றியமையாதது. இல்லையெனில் டீசல் பேருந்துகளின் பயன்பாட்டை குறைப்பதில் தமிழகம் பின்தங்கி விடும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதோடு மின்சார பேருந்துகளுக்கான முழு கட்டமைப்பையும் அசோக் லேலண்ட் நிறுவனத்தையே மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

புரட்சித் தலைவரான புரட்சி நடிகர்: ஏழை பங்காளர் எம்ஜிஆர்!

சமீபத்தில் மகாராஷ்டிரா போக்குவரத்து கழகம் 5150 மின்சார பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிறுவனத்திடம்  ஒப்பந்தமிட்டு, வெகு விரைவில் அம்மாநில நகரங்களில் அப்பேருந்துகள் வலம் வருவதற்கு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் மத்திய அரசின் மின்துறையை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும் எளிதாக நிதியுதவி பெற முடியும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஆகவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் தமிழகத்தின் தீவிர முயற்சியின் முக்கிய பங்காக, அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ள 552 டீசல் பேருந்து ஒப்பந்தத்தை ரத்து செய்து அவற்றை மின்சார பேருந்துகளாக மாற்றி கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

click me!