
திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதனை மாற்றி அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்ற போதும் முடியாத நிலையே ஏற்பட்டது. இந்த கட்சிகளுக்கு எதிராக அரசியல் கட்சி தொடங்கியவர்கள், அந்த கட்சியோடே கூட்டணி வைக்கும் நிலையும் உருவானது. இந்த நிலையில் சினிமா துறையில் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கியுள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவை அகற்ற வேண்டும்
தேனியில் பாஜகவின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகதிதல் பாரதிய ஜனதா கட்சியின் "ஒற்றை இலக்கு" 2026 தேர்தலில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் என கூறினார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறினார். இதற்காக மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது என குறிப்பிட்டார். எனவே 2026ல் திமுக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
விஜய்யோடு அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒரு காலத்தில் பாஜகவிற்கு ஆலோசகராக இருந்தவர். தமிழகத்தில் திமுகவிற்கு இருந்தார். இப்போது விஜய்யின் கட்சி ஆலோசனைக்கு சென்றுள்ளார். எங்கே அதிக பணம் கொடுக்கிறார்களோ அங்கே போய் ஆலோசனை சொல்லும் கமிஷன் ஏஜெண்ட் தான் பிரசாந்த் கிஷோர் என கூறினார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம் ஜி ஆர்.,ஐ தவிர யாருமே ஜெயிக்கவில்லை.
அரசியலில் விஜய் வெற்றி பெற முடியாது
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் வரை சென்றாலும் வெற்றி பெற முடியவில்லை. கமல்ஹாசன், உச்சத்தில் இருந்த ஆளுமை நடிகர் சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், கார்த்திக், டி.ராஜேந்தர் என கட்சி ஆரம்பித்த யாருமே வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் எம்ஜிஆர்., ஆந்திராவில் என் டி ராம ராவ் தவிர சினிமாவில் இருந்து வந்தவர்கள் யாருமே வெற்றி பெறவில்லை. அரசியலில் விஜயகாந்த், கமலஹாசன், சிவாஜி கணேசனுக்கும் நிகழ்ந்ததே விஜய்க்கும் நிகழும்.
விஜய் சினிமாவில் தொடரலாம். அரசியலில் முடியாது என உறுதியாக கூறினார். சீமான் ஒரு நல்ல "entertainer" சீமானை தமிழக மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் நம்பவில்லை. ரசிப்பது வேறு நம்புவது வேறு. ரசிப்பதை எல்லாம் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. அதனால் ஒரு நாளும் மக்கள் நம்பத் தன்மையை ஒரு நாளும் சீமானால் பெற முடியாது என பேராசிரியர் சீனிவாசன் தெரிவித்தார்.