தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு..? நீதிமன்றமே சொல்லிருக்கு திமிறாக சொன்ன அதிகாரி ?.. என்ன நடந்தது..?

By Thanalakshmi VFirst Published Jan 26, 2022, 3:26 PM IST
Highlights

சென்னை ரிசர்வ வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத வங்கி அதிகாரிகளின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.    

73 வது குடியரசு தின விழாவானது மத்திய, மாநில அரசுகளின் சார்பிலும், அனைத்து அலுவலகம், அனைத்து பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து பக்கங்களிலும் கொடியேற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும் இதற்கு மரியாதை செய்யும் வகையில் அனைவரும் எழுந்து நிற்பது வழக்கம்.

இந்நிலையில் குடியரசு தினத்தையொட்டி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் அதன் மண்டல இயக்குனர் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் இரு தரப்பினர் விளக்கம் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்ற உத்தரவிட்டிருப்பதாக வங்கி அதிகாரி வாதிட்டார். இதனால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டவே, வங்கியின் உயர் அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு மரியாதை செலுத்துவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர். 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலானது அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என அரசாங்கப் பொதுத் துறையின் சார்பில் 23.11.1970 அன்று அரசாணையாக வெளியிட்டார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.இதன் அடுத்தகட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடல் பாடும்போது மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள்,கர்ப்பிணிகள் தவிர அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனும் அரசாணையை இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 17.12.2021 அன்று வெளியிட்டார். 

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் வகையில் எழுந்து நிற்க மறுத்து தனது இருக்கையிலயே அமர்ந்திருந்தது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

click me!